வணங்கான் – திரைவிமர்சனம்!

120

 

 

படம்: வணங்கான்

நடிப்பு: அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின்,, அருள்தாஸ், தருண் மாஸ்டர், மற்றும் பலர்

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இசை: ஜிவி பிரகாஷ் குமார், பின்னணி இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: ஆர்பி. குருதேவ்

இயக்கம்: பாலா

பிஆர்ஓ: ஜான் ஏ

சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவன் சிறுமி இருவரும் அண்ணன் தங்கையாக இணைந்து வாழ்கின்றனர். அண்ணன்  கோட்டி (அருண் விஜய்) வாய் பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளி. கன்னியாகுமரி கடலில் சுற்றுலா படகு ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் தங்கையையும் காப்பாற்றுகிறான்.   ஒரு சமயம் மாற்று திறனாளி பெண்கள் வசிக்கும் விடுதியில் மூன்று ஆண்கள் குளியல் அறையில் மறைந்திருந்து அந்தப் பெண்கள் குளிப்பதை பார்க்கின்றனர். இதை எப்படியோ புரிந்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண்கள்  அங்கிருந்து  வெளியேறி  பாத்ரூமுக்குள் யாரோ இருப்பது போல் தெரிகிறது என்று கோட்டியிடம் சொல்ல அவன் அந்த ஆசாமிகளை பிடித்து அடிதது கழுமரம் ஏற்றி கொல்கிறான்.  இந்த கொலையை செய்தது யார் என்று போலீசார் விசாரிக்கும் போது போலீஸில் ஆஜராகி நான் தான் கொலை செய்தேன் என்று கோட்டி  ஒப்புக்கொள்கிறான் ஆனால் எதற்காக கொன்றேன் என்ற காரணத்தை சொல்ல மறுக்கிறான். அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க போலீசார் டார்ச்சர் செய்கின்றனர்.  இந்த நிலையில் இன்னொரு கொலையும் கோட்டி செய்கிறான். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு கிளைமேக்ஸ் அதிரடி பதில் அளிக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கிறது வணங்கான். பாலா படம் என்றாலே அதற்கு ஒரு தனி முத்திரை உண்டு அந்த முத்திரையை வணங்கான் படத்திலும் பதிக்க தவறவில்லை பாலா.

பெண்கள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பல .வரிசைகட்டி வந்திருந்தாலும் அந்த கதையை இன்னொரு புதிய கோணத்தில் படைத்திருக்கிறார் பாலா. பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்கு இதுதான் அவர்களுக்கான சரியான தண்டனை என்று ஆணி அடித்தார் போல் துணிச்சலாக உரக்கச் சொல்லி இருக்கிறார்.

வாய் பேசாத காது கேளாத கதாபாத்திரத்தில் அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார். பாலா இயக்கத்தில் நடிக்கிறோம் என்று தெரிந்தாலே அந்த ஹீரோக்கள் தங்களது முழு அர்பணிப்பை தந்து விடுவது வழக்கம். விக்ரம் தொடங்கி விஷால் வரை அதைத்தான் செய்தார்கள் . அருண் விஜயும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

தங்கை மீதான பாசத்தை நெஞ்சிலும், பாலியல் குற்றவாளிகளின்  மீதான கோபத்தை உச்சி முதல் பாதம் வரையிலும் வைத்து  நடிப்பில்  சூறை  காற்றாக சுழன்று அடித்திருக்கிறார் அருண் விஜய்.

கொலை செய்ததற்கான காரணத்தைச் சொன்னால் மாற்றுத் திறனாளி பெண்களின் மானம் பறிபோய்விடும் என்ற காரணத்திற்காக அதை வெளியில் சொல்லாமல் உன்னால் என்ன முடியுமோ செய்து கொள் என்று தன்னிடம் விசாரணை நடத்தும் சிறப்பு போலீஸ் அதிகாரி  சமுத்திரக்கனியிடம் அருண் விஜய் சைகை மூலம் சொல்வதிலேயே ஒரு ஆக்ரோஷம் தெரிகிறது.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே இதே மூடோடு காட்சிகள்  ஜிவ்வென பறக்கின்றன..

கண்டிப்பான நீதிபதியாக வரும் மிஷ்கின் பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.

டூரிஸ்ட் கைடாக வரும் கதாநாயகி ரோஷினி பிரகாஷ் மணிரத்னம் பட ஹீரோயின போல் சுறுசுறுப்பாக குறும்புத்தனம் நிறைந்த சுட்டிப் பெண்ணாக நடித்து யார்ரா இந்த புதுமுகம் என்று கேட்க வைக்கிறார்.

அருண் விஜய  மாங்கு மாங்கு என்று முதுகில் குத்து வாங்கினாலும்  காதலிப்பதாக அவரையே  சுற்றி வருவதெல்லாம். செம ஜாலியான காட்சிகளாக இதயத்தை லேசாக்குகிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புரட்சிகரமான  ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்

 

இயக்குனர் பாலாவின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றொரு கூர்மையான படைப்பு வணங்கான்.

ஒளிப்பதிவாளர் ஆர்பி குருதேவ் கன்னியாகுமரியின் கண்கொள்ளா காட்சிகளை கட்டுக்கோப்பாக  கட்டிவந்து கடை விரித்திருக்கிறார். வானுயர்ந்த வள்ளுவன் சிலை, அறிவுத்தெளிவு.  பிறக்கும் விவேகானந்தர் பாறை என குமரியின் கிரீடங்களை கண்களுக்கு மகுடமாக்கி இருக்கிறது குருதேவின் கேமரா.

ஜிவி பிரகாஷ் இசையில் ஒலிக்கும் பாடல்கள் உள்ளத்தை அள்ளவும், கிள்ளவும், துள்ளவும் செய்கிறது. சாம் சி எஸ்  பின்னணி இசை சம்பவம் செய்திருக்கிறது.

வணங்கான்  – படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3.5/5