

ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் திலக், தீவிர விநாயகர் பக்தராக இருக்கிறார். தனது பணியில் தீவிரம் காட்டாமல் மற்றவர்களை ஏமாற்றுவதில் தீவிரம் காட்டுபவர், தனது வாழ்க்கை குறித்து அவ்வபோது விநாயகர் சிலை முன்பு புலம்புகிறார். இதற்கிடையே, திடீரென்று ரமேஷ் திலக் கண்ணுக்கு விநாயகர் தெரியாமல் போய் விடுகிறார். எங்கு சென்றாலும் அங்கிருக்கும் விநாயகர் புகைப்படமோ அல்லது சிலையோ ரமேஷ் திலக் கண்ணுக்கு மட்டும் தெரியாமல் போக, அதனால் அவரது வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் கதாபாத்திரம் போலவே படம் முழுவதும் வலம் வரும் ரமேஷ் திலக், வழக்கமான பாணியில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.தும்பிக்கை இல்லாத விநாயகராக நடித்திருக்கும் யோகி பாபு, சிரிக்க வைப்பதைவிட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வசனங்களை அதிகமாக பேசியிருக்கிறார்.
ரமேஷ் திலக்கின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், எப்போதும் போல தனது குணச்சித்திர நடிப்பையும், அளவான காமெடியையும் கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார்.
வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ஊர்வசியின் கதாபாத்திரம், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா! என்று ஆச்சரியப்பட வைக்கிறது.
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், என்ற கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, மக்களுக்கு நல்ல கருத்தை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், பலமில்லாத திரைக்கதை படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது.
கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.பரத் சங்கரின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசை படத்திற்கு சற்று பலம் சேர்த்துள்ளது.
ரமேஷ் திலக்கின் குணத்தை மாற்ற நினைக்கும் விநாயகர், அதை தமிழகத்தில் இருந்து செய்யாமல் அவரை ராஜஸ்தானுக்கு எல்லாம் அழைத்து செல்கிறார். ஆனால், அந்த காட்சிகள் ரசிகர்களின் பொருமையை சோதிக்கும் வகையில் இருக்கிறது.ரமேஷ் திலக், யோகி பாபு, கருணாகரன் மற்றும் ஊர்வசி போன்ற நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு படத்தில் எந்த இடத்திலும் நகைச்சுவை நெடியே இல்லாமல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும், திரைக்கதை மெதுவாக நகர்வதும் படம் பார்ப்பவர்களை தூங்க வைத்துவிடுகிறது.மொத்தத்தில், ‘யானை முகத்தான்’ ஏமாற்றம்.
Rating: 2/5
Thanks,