
மியூசிக் ஸ்கூல்” பாப்பா ராவ் பிய்யாலா எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் ஸ்ரேயா, ஷான், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மங்களா பட், சுஹாசினி முலே, பெஞ்சமின் கிலானி, கிரேஸி கோஸ்வாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கோவாவில் இருந்து வந்த ஸ்ரேயா ஹைதராபாத்தில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேலைக்கு சேர்கிறார். அந்த பள்ளியில் மாணவர்கள் மார்க் வாங்கவேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்குகிறது, ஆகவே இசை வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த நேரத்திலும் கணக்கு அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்கிக் கொள்ள , இசை ஆசிரியருக்கு பள்ளியின் வரவு செலவுகளை பார்க்கும் வேலைதான் கிடைக்கிறது. இதனால் ஸ்ரேயா நாடக ஆசிரியராக பணியாற்றும் சர்மன் ஜோஷியுடன் சேர்ந்து மியூசிக் ஸ்கூல் ஒன்றை அவரின் வீட்டிலேயே தொடங்குகிறார். அங்கு பயிலும் மாணவர்களை வைத்து சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாணவ, மாணவிகளை கோவா அழைத்து செல்கிறார்கள். அங்கு பயிற்சி முடிந்து திரும்பும்போது அதிலுள்ள கமிஷ்னர் பிரகாஷ்ராஜின் மகள் மாயமாகிவிடுகிறார். இதனால் ஐதராபாத்தில் அரங்கேர இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா மற்றும் சர்மன் ஜோஷியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். மாயமான பிரகாஷ்ராஜின் மகள் கிடைத்தாரா? அவருக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் நினைத்தபடி சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் கதை.
ஷ்ரேயா நிஜமான பாடல் ஆசிரியர் போலவே தோன்றி இருக்கிறார். மாணவர்களுக்கு இணையாக துள்ளல் நடிப்பு மூலம் மனம் கவருகிறார்.
ஸ்ரேயாவை ஒருதலையாக காதலிக்கும் பிரபல பின்னணி பாடகரும், இசைக்கலைஞருமான ஷான், சில காட்சிகள் வந்தாலும் தனது காதலை ஸ்ரேயாவிடம் வெளிப்படுத்திவிட்டு ஏமாற்றத்தோடு விடைபெறும் காட்சியின் மூலம் மனதில் நிற்கிறார்.
பிரகாஷ்ராஜ் கண்டிப்பான காவல் அதிகாரியாக மட்டுமின்றி, கண்டிப்பான தந்தையாகவும் சிறப்பாக நடித்து உள்ளார்.
இசைப் பள்ளி மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் இளம் வயதினரும், சிறு வயதினரும் எந்தவித தயக்கமும் இன்றி நடிப்பிலும், நடனத்திலும் அசத்துகிறார்கள்.
லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மங்களா பட், சுஹாசினி முலே, பெஞ்சமின் கிலானி, கிரேஸி கோஸ்வாமி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ் காட்சிகளை பளிச்சென்றும் பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். கோவா காட்சிகளையும், இசைப் பள்ளி மற்றும் மாணவர்கள் குடியிருப்பு என அனைத்து ஏரியாக்களையும் ஆல்பம் போன்று காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகமாக இருக்கிறது. அதிலும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடியிருக்கும் இளையராஜா, முற்றிலும் வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதோடு, இசை மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பாப்பா ராவ் பிய்யாலா, படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, வசனத்தை கூட பாடல்களாகவே கொடுத்திருப்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், அதுவும் ஒரு வகையில் வித்தியாசமான முயற்சியாகவே இருக்கிறது.
இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக செல்ல மறுக்கிறது.
‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கான முயற்சி தான் படத்தின் மையக்கரு என்பதால், அந்த நாடகத்தில் மாணவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அந்த நாடகம் அரங்கேறும் போது அதை முழுமையாக காட்டாமல், இளம் ஜோடியின் ஆட்டம், பாட்டத்துடன் முடித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக பார்க்க கூடாது என்ற வழக்கமான மெசஜை பெற்றோர்களுக்கும், இளம் வயதில் வரும் காதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படித்து முடித்துவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மற்றொரு வழக்கமான மெசஜை மாணவர்களுக்கும், சொல்லியிருக்கும் இயக்குநர் பாப்பா ராவ் பிய்யாலா, அதை இசையோடு சேர்த்து சொல்லும் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
Rating: 3/5
Thanks,