
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலை கிராமம் ஒன்றில் இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்தில் காளி வெங்கட் பணியாற்றுகிறார். கடித போக்குவரத்தைக் காட்டிலும், முதியோர் உதவித்தொகை, சிறு சேமிப்பு போன்ற பண பரிமாற்றங்களுக்காக அந்த கிராம மக்கள் அஞ்சல் அலுவலகத்தை சார்ந்திருக்கிறார்கள். அதே சமயம், அந்த ஊர் மக்களின் வெகுளித்தனமான செயல்களை தொல்லையாக நினைக்கும் தபால்காரர் காளி வெங்கட், அந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைக்கிறார். அதற்காக, அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுவதோடு, அதை கிராம மக்களுக்கு தெரியாமல், அவர்கள் மூலமாகவே செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.இதற்கிடையே, கடிதம் ஒன்றை உரியவரிடம் சேர்ப்பதற்காக மலை மீது நெடுந்தூரம் பயணிக்கும் காளி வெங்கட், கிராம மக்கள் தெய்வமாக வணங்கும் மாதேஸ்வரனின் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்வதோடு, தனது தவறையும் உணர்கிறார். காளி வெங்கட்டின் மனதை மாற்றிய அந்த மாதேஸ்வரன் யார்?, அவர் அந்த மக்களுக்காக செய்த தியாகம் என்ன? என்பதை சொல்வது தான் ‘ஹர்காரா’.
உலகத்திலேயே மிகப்பெரிய அஞ்சல் துறையாக செயல்படும் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களின் பணி சாதாரணமானது அல்ல என்பதை, குலதெய்வமாக வணங்குபவர்களின் பின்னணியில் இருக்கும் தியாக கதையோடு சேர்த்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ.
தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது குமுறலை வெளிப்படுத்துவதிலும் சரி, கிராம மக்களின் அன்புத்தொல்லையில் சிக்கி அவதிப்படுவதிலும் சரி, தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.மாதேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். 150 வருடங்களுக்கு முன்பு தபால்காரர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய பணி எத்தகைய சிரமம் வாய்ந்தவையாக இருக்கும், என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படுத்தியிருப்பவர், சிலம்பம் சுற்றுவதிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கவுதமி செளத்ரியின் வேடம் சிறியது என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்திருக்கும் நிக்கோலா ஃபுஸ்ட்டேர், பாலு போஸ், அம்பேத், கயல் விஜயலட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இருவரது பணியும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. மலை கிராமங்களில் பயணிக்கும் தபால்காரர்களின் வலி மிகுந்த பயணத்தை பார்வையாளர்களும் உணரும்படி காட்சிகளை படமாக்கியிருப்பவர்கள், 150 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ராம் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஆரவாரம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இரண்டு கதைகளையும் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் டேனியல் சார்லஸ், அடுத்தது என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில், இரு கதைகளின் காட்சிகளையும் சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதோடு, ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.ஹர்காரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ தான் கதை எழுதி இயக்கியிருக்கிறார். தபால்காரர்களின் பணி மற்றும் அஞ்சல் துறையின் சிறப்பை சொல்லும் ஒரு கதையில், ஹர்காரா என்று அழைக்கப்பட்ட தபால்காரர்களை பற்றிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் அனைவரும் ’ஹர்காரா’ படத்தை பார்க்கலாம்.