‘சார்” திரைப்பட விமர்சனம்!

120

 

 

சென்னை:

படம்: சார்

நடிப்பு: விமல், சாயாதேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன்,  விஜய் முருகன், சரவணன் சக்தி பிரணா, எலிசபெத்

தயாரிப்பு: சிராஜ் எஸ், நிலோபர் சிராஜ்

இசை: சித்துகுமார்

ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹரிஷ்

இயக்கம்: போஸ் வெங்கட்

பிஆர் ஓ: சதீஷ் எஸ்2 மீடியா

மாங்கொல்லை என்ற கிராமத்தில் தங்கள் ஊரில் உள்ள பிள்ளைகள் யாரும் படிக்கக் கூடாது என்பதற்காக சாமி பெயரை சொல்லி பயமுறுத்துகின்றனர். ஆனால் அங்கு வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்த பயத்தை போக்கி சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கி கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளை பள்ளியில்  சேர்த்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அவருக்கு பைத்தியம் பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கின்றனர். பின்னர் அவரது மகன் ஆசிரியராக  வந்து  யாருக்கும் பயப்படாமல் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கிறார். அவர்  ஓய்வு பெற்று செல்லும்போது அவரது பிள்ளை  சிவஞானம் (விமல்) ஆசிரியராகி பாடம் கற்பிப்பதுடன் தனது தந்தையின் ஆசைப்படி அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த முயல்கிறார் . பள்ளியே வேண்டாம் என்று ஊரில் சிலர் அடாவடி செய்து பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு செய்கின்றனர். அவர்களால் பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிந்ததா? ஊர் பிள்ளைகளை  பள்ளிக்கு செல்ல விடாமல்  தடுக்க முடிந்ததா , சிவஞானம் எடுத்த முடிவு என்ன என்ற கேள்விகளுக்கு சூடு தரும் வகையில் பதில் அளிக்கிறது “சார்’ படத்தின் கிளைமாக்ஸ்.

தனது தந்தை சரவணன் ஓய்வு பெற்ற பிறகு அதே பள்ளிக்கு  ஆசிரியராக வரும் விமல் தொடக்க காட்சிகளில் விளையாட்டுப் பிள்ளை போல் ஜாலியாக காட்சிகளை நகர்த்துகிறார்.

பக்கத்து வகுப்பில் இருக்கும் சாயாதேவி டீச்சருக்கு தன் புகழ் தெரிய வேண்டும் என்பதற்காக பள்ளி சிறுவனுக்கு மதிப்பெண்ணை அதிகமாக போட்டு தன்னை பற்றி புகழ வைப்பதும், ஒரு கட்டத்தில் தான் காதலிக்க இயலாது என்று சாயாதேவி சொன்னதும் கோபம் அடையும் விமல் அதே மாணவனை  பிரம்பால் வெளுத்து கட்டுவதும் அரங்கை கலகலப்பாக்குகிறது.

இந்த காதல் விளையாட்டு எல்லாம் கொஞ்சம் நேரம் தான்  பின்னர் கதை சீரியஸ் ஆகி விடுகிறது. பள்ளிக்கூடத்தை இடிக்க ஊரில் உள்ள பெரிய மனிதன் ஜெயபாலனுடன் சேர்ந்து கொண்டு இன்னும் சிலர் பள்ளிக்கூடத்தை இடிக்க புல்டோசர்  கொண்டு வந்து கட்டிடத்தை இடிப்பது மனதை பதபதைக்க செய்கிறது.

விமல் வழக்கமான நடிப்பிலிருந்து  முற்றிலும் மாறுபட்டிருக்கிறார். தொடக்க காட்சிகளில் காமெடி கலந்து காதல் நூல் விட்டு தனது கலகலப்பான நடிப்பை காட்டினாலும் தனது தந்தை சரவணன் மனநிலை பாதிக்கப்பட்ட பிறகு பொறுப்பான  ஆசிரியராக  மாறி படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறார்.

ஊரே திரண்டு விமலை தாக்குவதும் பின்னர் கொதித்தெழும் விமல் பள்ளி கட்டிடத்தை சாமியாடியாக வந்து இடிக்க பார்க்கும் சிராஜை வழிமறித்து தாக்குவதும்,  அடியாட்களை தூக்கி வீசி பந்தாடுவமாக ஒரு ஆக்சன் ஆரவாரத்தை அரங்கேற்றுகிறார்.

விருமாண்டி கமல் பாணியில் கிளைமாக்ஸசில் பெரிய அரிவாளை வைத்துக்கொண்டு விமல் செய்யும் அந்த காரியம் இதுவரை அவர் எந்த படத்திலும் இவ்வளவு துணிச்சலாக செய்ததில்லை.

வில்லனாக  தயாரிப்பாளர் .எஸ். சிராஜ் நடித்திருக்கிறார்.  விமலின் நண்பனாக இருந்துக் கொண்டு சகுனித்தன  வேலைகள்  செய்து  கழுத்தறுக்கும்  வில்லத்தனம்.,  சாமியாடியாக  ஆவேசமாக  வந்து பள்ளி கட்டிடத்தை இடிப்பது என  அரங்கை பரபரப்பாக்குகிறார்

பருததிவீரன் சரவணன் நல்லாசிரியராக வந்து அமைதியாக பேசி அர்த்தமுள்ள நடிப்பை வழங்குகிறார். வயக்காட்டில் ஏற்படும் விபத்துக்கு பிறகு பக்கவாதம் வந்து அவர் தள்ளாடி  நடப்பதும்,  பிதற்றலாக பேசுவதுமாக நடிப்பை கொட்டியிருக்கிறார்.

கதாநாயகியாக வரும் சாயாதேவி முதல் பாதி வரை விமலுடன் கண்களால் பேசி காதல் சித்து விளையாடுவது ருசிகரம்.

ரமா, மகேஷ், விஜய் முருகன், சரவணன் சக்தி பிரணா, எலிசபெத் தங்கள் பங்கை நிறைவாக செய்துள்ளனர்.

சித்துகுமார் இசையில்  பாடல்கள் மனதை கவ்வுகின்றன. படிச்சிக்கிறோம் பொழைச்சிக்கிறோம் பாடல் ஆயிரம் அர்த்தங்களை கற்பிக்கிறது.

இனியன் ஜெ ஹரிஷ் ஒளிப்பதிவு  ரசிகர்களை 80 காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது

நடிகர் போஸ் வெங்கட் இப்படத்தை  அற்புதமாக இயக்கி உள்ளார். யாரெல்லாம் கீழே விழுந்திருக்கிறார்களோ அவர்களை உயர்த்தும் ஒரே ஆயுதம் கல்விதான் என்ற கருத்தை ஆணி அடித்தார் போல் சொல்லி இருப்பது  படத்தைப் யார்  பார்த்தாலும்  கண்டிப்பாக பிள்ளைகள் படித்தே  ஆக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

மொத்தத்தில் ‘சார்’ அனைவரும் போற்றக் கூடிய பட்ம்.

 

ரேட்டிங் 3.5/5