’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்!

100

 

சென்னை:

படம் (வெப் சீரிஸ் ): ‘வாரண்ட்’

நடிப்பு: பிரசாந்த் பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், அம்ரிதா எம் வி, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா கௌசல்யா, வையாபுரி

தயாரிப்பு: பிரசாந்த் பாண்டிராஜ், பி.விஷால், ஆதிஸ்வர்,

இசை: சாம் சி எஸ்.

ஒளிப்பதிவு : ஏ ஆர் அசோக்குமார்

கதை, திரைக்கதை : பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன்

இயக்கம் : விக்னேஷ் நடராஜன்

வெளியீடு:ZEE5 Original Tamil

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

‘விலங்கு’ இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் ‘வாரண்ட்’.

பாலாஜி சக்திவேல் தன் மகன் பிரசாந்த் பாண்டியராஜை எப்படியாவது அரசு ஊழியராக்கி விட வேண்டும் என்பதற்காக பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். எதிலும் அவர் தேர்ச்சி பெறாமல் போக இறுதியில், காவல்துறையில் பணியாற்றும் உறவினர்   காளி வெங்கட்  மூலம் அவரை காவல் நிலையத்தில் காவலராக்கி விடுகிறார்கள். அரசு வேலைக்காக காவல்துறையில் சேரும், பிரசாந்த் பாண்டியராஜ் அதன் கட்டமைப்பை கடக்க முடியாமல் திணறுவதோடு, அங்கிருக்கும் ஈகோ உள்ளிட்ட எதிர்மறை விசயங்களால் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார். இதனால் பெரிதும் வெறுப்புக்கு உள்ளாகும் அவர் தன்னை நிரூபிக்க முயற்சி செய்கிறார். அது ஒரு விபரீதத்தில் முடிகிறது. திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில் லாக்கப் கொலை என்கிற பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிறார்.அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘வாரண்ட்’ இணையத் தொடரின் மீதிக் கதை.

‘விலங்கு’ வெப் சீரிஸ், ‘மாமன்’ படம் ஆகிவற்றை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் ‘வாரண்ட்’ வெப் சீரியஸ் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். வெள்ளந்தியான முகம், முற்றாத குரல் ,வெகுளித்தனமான தோற்றம் கொண்ட அந்தக் கோட்டை கருப்புசாமி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். அவர் எதிர் கொள்ளும் இன்னல்கள், அவரது மனதுக்குள் இருக்கும் வலிகள், தன் திறமையை அவர் வெளிப்படுத்த நினைக்கும் இடம் என பன்முக கலைஞனாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி என மூன்றுபேர் இருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் திரைக்கதையில் உரிய பங்கு இருக்கிறது. அவற்றில் அவர்கள் இயல்பாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.

கதாநாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருள்தாஸ்,காவலராக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி மற்றும் கொடைக்கானல் சரவணன் ஆகியோரும் நன்றாக நடித்து தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சாம் சி எஸ்’ன் பின்னணி இசை இந்த தொடருக்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு மற்றும் ராமர் அவர்களின் படத்தொகுப்பு என அனைத்தும் ஒரு சேர, இந்த தொடருக்கு பலமாக இருந்திருக்கிறது.

விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார்.எழுத்திலும் அவர் பங்களிப்பு இருப்பதால் காட்சிகள் அமைப்பதில் தெளிவு இருக்கிறது. பொதுவாக போலீஸ் கதைகள் என்றாலே ஹீரோயிசம் மற்றும் ஆக்ஷன் மையமாக இருக்கும். ஆனால் வாரண்ட், போலீஸ் அமைப்பின் செயல்பாடுகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கவனமாகவும், சமூக பொறுப்புடனும் பதிவு செய்கிறது. இது தான் இந்த தொடரின் மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில், ‘வாரண்ட்’ அனைவரும் ரசிக்கும் இணையத் தொடர்.

ரேட்டிங் 4/5.