Akkaran – திரைப்பட விமர்சனம்!

152

 

 

 

படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே இருவரை கடத்தி சென்று அடைத்து வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அவர்களிடம் சில கேள்விகளை கேட்கிறார். அதற்கு இருவரும் வெவ்வேறு மாதிரியாக பதில் சொல்கிறார்கள். அவர்களுடைய பதில்களில் உண்மை இல்லாததால் அவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க எம்.எஸ்.பாஸ்கர் தயாராக, ஒரு கட்டத்தில் இருவரும் உண்மையை சொல்கிறார்கள். அதன் மூலம் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் திரையில் விரிகிறது. அது என்ன?, அதற்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் என்ன தொடர்பு?, அவர் கடத்தி வைத்திருக்கும் இரண்டு நபர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர், இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது மகள்களுக்கு நேர்ந்த கொடுமைக்காக பழி தீர்க்க கிளம்பும் அவரால் இது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தாலும், அனல் தெறிக்கும் பார்வையோடு, தன் மனதில் இருக்கும் கோபத்தை சரியான முறையில் வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர், பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான தந்தை வேடத்தில் இயல்பாக நடித்து படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்.
முக்கியமான வேடமாக அறிமுகமாகி படத்தின் திடீர் திருப்பத்தால் மற்றொரு நாயகனாக உருவெடுக்கும் கபாலி விஷ்வாந்த், தான் ஏற்றுக்கொண்ட வேடத்தை கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகளாக நடித்திருக்கும் வெண்பா, மிக இயல்பாக நடித்திருப்பதோடு, சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட ரசிக்கும்படி செய்து அசத்துகிறார். இளைய மகளாக நடித்திருக்கும் பிரியாவின் நடிப்பு அளவு.
அரசியவாதி வேடத்திற்காகவே வளர்க்கப்பட்டு வரும் நமோ நாராயணன் தனது வழக்கமான பாணியில் அரசியல்வாதி வேடத்தை அசால்டாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் ஆகாஷ் பிரேம் குமார் மற்றும் கார்த்திக் சந்திரசேகர் இருவருக்கும் பெரிய சினிமா அனுபவம் இல்லை என்றாலும், பலமான கதாபாத்திரத்தை மிக பக்குவமாக கையாண்டு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ரேட்டிங் 2.5/5