
சென்னை:
படம்: நந்தன்
நடிப்பு சசிகுமார், சமுத்திரகனி, சுருதி பெரியசாமி, மகேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், கட்டெறும்பு ஸ்டாலின் ம்ற்றும் பலர்.
தயாரிப்பு: இரா சரவணன்
இசை: ஜிப்ரான் வைபோதா
ஒளிப்பதிவு: ஆர்.வி. சரண்
இயக்கம்: இரா சரவணன்
பி ஆர் ஓ: யுவராஜ்
அந்த கிராமத்தில் உள்ள உயர் ஜாதியை சேர்ந்த பாலாஜி சக்திவேல் ஊர் பஞ்சாயத்து தலைவராக பரம்பரையாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அந்த ஊரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர் அவரை அண்டி பிழைக்கின்றனர். பாலாஜி வீட்டில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சசிகுமார் அடிமை போல் நடத்தப்படுகிறார். பாலாஜி சக்திவேல் என்ன சொன்னாலும் அதை செய்யும் ஒரு கூலிக்காரனாகவே அவர் வீட்டில் வேலை செய்கிறார் இந்நிலையில் அந்த கிராமம் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆக முடியும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதிர்ச்சியடையும் பாலாஜி சக்திவேல் தன் சொல்படி கேட்கும் சசிகுமாரை பஞ்சாயத்து தலைவர் ஆக்குகிறார். ஒரு சில விஷயங்களில் சசிகுமார், பாலாஜி சக்திவேலை மீறி சில வேலைகள் செய்ய முற்படும் போது அவரை கொல்லவும் துணிகிறார் பாலாஜி சக்திவேல். அதன்பிறகு நடப்பது என்ன என்பதுதான் ‘நந்தன்’ படத்தின் மீதிக் கதை.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் முதன் முறையாக நடித்திருக்கிறார். அழுக்கு சட்டை , அழுக்கு வேட்டி,, வெற்றிலை குதப்பும் வாய் என அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார். கும்பிடு போட்டு பாலாஜி சக்திக்கு அவர் செய்யும் பணிவிடைகள் படுக்கையில் கிடக்கும் அவரது அப்பாவுக்கு செய்யும் பணிவிடைகள் என ஒரு அடிமை போலவே மாறி விடுகிறார்.
பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு சசிகுமார் உடையிலும் நடையிலும் ஒரு புது மெருகு தெரிகிறது. சுதந்திர தினத்துக்கு ஊராட்சி மன்ற கட்டிடத்தில் கொடியேற்ற காணும் கனவு திசை மாறிப் போவது எதிர்பார்த்த காட்சிதான்.
மேலதிகாரியை சசிகுமார் சந்தித்தார் என்பதற்காக அவரை காருக்குள் வைத்து பாலாஜி சக்திவேல் மற்றும் அடியாட்கள் நாயடி பேயடி அடித்து காரிலிருந்து தூக்கி வீசுவது பரிதாபம்.
காட்சிகள் இப்படியே மாறி மாறி சென்று கிளைமாக்ஸ் காட்சி திருப்பமும் ஆச்சர்யமும் தருகிறது.
ஊர் பஞ்சாயத்து தலைவராக வரும் பாலாஜி சக்திவேல் எதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை கனமாக்குகிறார்.
சசிகுமார் மனைவியாக வரும் ஸ்ருதி பெரியசாமி கச்சிதமான தேர்வு.
தொடர்ச்சியாக பா ரஞ்சித் படம், மாரி செல்வராஜ் படம், இன்னும் சில இயக்குனர்களின் படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் படமாக வந்ததால் அலுப்பு தட்டுகிறது.
இரா சரவணன் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்படுவது போலவே காட்டுவது நெகட்டிவ் எனர்ஜியை தான் தரும். அவர்கள் எழுந்து நின்று சாதிப்பது போல காட்டினால் அதை பார்ப்பவர் களுக்கு உத்வேகம் பிறக்கும். இந்த கருவுடன் இனி வரும் படங்கள் அமைந்தால் புதிய பாதை அமையும்.
ஆர்.வி சரண் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை. ஓகே.
மொத்தத்தில் ‘நந்தன்’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5