‘மெய்யழகன்’ திரை விமர்சனம்!

135

 

CHENNAI:

படம்: மெய்யழகன்

நடிப்பு: கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுவாதி, ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு மற்றும் பலர்

தயாரிப்பு : 2D என்டர்டைன்மெனட் சூர்யா ஜோதிகா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ்

இயக்கம்: சி. பிரேம் குமார்

பிஆர்ஓ : ஜான்சன்

சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக தஞ்சாவூரில் வீட்டை விற்றுவிட்டு பெற்றோருடன் சென்னைக்கு வருகிறார் அரவிந்த்சாமி. வருடங்கள் உருண்டோடுகிறது உறவுமுறை தங்கை திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூரில் உள்ள கிராமத்துக்கு வருகிறார். திருமண வரவேற்பிலேயே பரிசு கொடுத்துவிட்டு அன்று இரவே சென்னை திரும்ப திட்டமிடுகிறார் அரவிந்த்சாமி. கிராமத்துக்கு வரும் அவரை திருமண மண்டபத்தில் கார்த்தி சந்திக்கிறார். அத்தான் அத்தான்  என்று உருகுகிறார், பாச மழை பொழிகிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்துசாமிக்கு தெரியவில்லை. உறவு முறைகளின் மேன்மையை  கார்த்தி  சொல்லச் சொல்ல புரிந்து கொண்டு கண்ணீரில் கசியும் அரவிந்த்சாமி சென்னை திரும்புகிறார் ஆனாலும் கார்த்தி யார், அவர் பெயர் என்ன என்பது தெரியாமல் தவிக்கிறார். இதற்கெல்லாம் நெகிழ்ச்சியுடன் பதில் அளிக்கிறது மெய்யழகன்.

மார்டனாக,  தனி ஒருவனில் ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த்சாமியை பார்த்து பழகிய கண்கள் அவரை ஒரு கிராமத்து மனிதராக பார்க்க முடியுமா என்று எந்த இயக்குனராலும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது ஆனால் அதை கற்பனை செய்து பார்த்திருப்பத்துடன் கண்முன் அவரை கிராமத்தானாக மாற்றிகாட்டியிருக்கிரார். இயக்குனர் சி பிரேம் குமார்.

அரவிந்த்சாமியை திருமண மண்டபத்தில் சந்திக்கும் கார்த்தி அவரை மூச்சுக்கு 300 தரம் அத்தான் அத்தான் என்று அழைத்து அன்புத் தொல்லை தருவதும் அவர் யார்,  அவர் பெயர் என்ன என்பது கூட தெரியாமல் அரவிந்த்சாமி தவிக்கும் தவிப்பும்  இடைவேளை வரை படத்தை நகர்த்தி சென்று விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் இடைவேளை இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

அரவிந்த்சாமியும் கார்த்தியும் பீர் அடித்துவிட்டு பழைய பாடல்களை ஹம்மிங்  செய்து பாடுவது 90ஸ் கிட்ஸ்களை மீண்டும் 90சுக்கு கொண்டு சென்று விடும்.

அரவிந்த்சாமி அழகாக சிரித்து தான், பார்த்திருக்கிறோம் ஆனால் அவர் நம் மனதையும் கரையச்  செய்யும் அளவுக்கு கண்ணீர் சிந்தி நடிப்பார் என்பதை முதன் முறையாக இப்படத்தில்த்தான் பார்க்க முடிகிறது.

சிட்டி சப்ஜெக்ட் நாயகன் அரவிந்த் சாமியே இந்த அளவுக்கு கிராமத்துக் கதையில் ஒன்றி போய் நடித்திருக்கிறார் என்றால் கிராமத்தானாகவே பல படங்களில் வாழ்ந்த கார்த்திக்கு இந்த கதாபாத்திரம் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. பிண்ணி பெடலெடுத் திருக்கிறார்.

அணைக்கட்டில் அரவிநத்சாமியுடன் அமர்ந்து கொண்டு கார்த்தி பேசும் தமிழ் வரலாறு, தலைமுறை வரலாறு, ஈழத் தமிழர் படுகொலை என பேசும் வசனங்கள் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. காரணம் கார்த்தி இந்த வசனங்களை உதட்டில் இருந்து  பேசவில்லை இதயத்தில் இருந்து பேசியிருக்கிறார்.

மெய்யழகன் படத்தில் இந்த காட்சி நன்றாக இருக்கிறது அந்த காட்சி நன்றாக இருக்கிறது. இந்த பாடல் நன்றாக இருக்கிறது அந்த பாடல் நன்றாக இருக்கிறது இந்த சண்டை நன்றாக இருக்கிறது அந்த சண்டை  நன்றாக. என்று பிரித்து கூற முடியாது. இது எல்லாமே உறவு முறைகளின் உணர்ச்சி பெருவெள்ளம்  மாறி தஞ்சை தரணியில் பாய்ந்து  நம் இதயத்தை உணர்வு நரம்பால் தைக்கிறது.

கார்த்தியின் ஜோடியாக ஸ்ரீ திவ்யா வருகிறார். கொஞ்சம் தான் அவருக்கு காட்சிகள் ஆனால் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார். அரவிந்த் சாமிக்கு ஜோடி யார் தெரியுமா? தேவதர்ஷினி! ஏன்? படத்தில் ஒரு சைக்கிள் கதை ஒரு காளையின் கதையும் உள்ளது. ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதை எந்தவித குறையும் இன்றி செய்து மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள்.

கோவில் வசந்த் இசையில் பாடல்கள் குறிப்பாக பின்னர் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அதேபோல ஒளிப்பதிவாளரும் இயக்குனரின் எண்ணம் புரிந்து மிகச் சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

 

இயக்குநர் சி.பிரேம்குமார் ஒரு இரவு பயணத்தின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதைக்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் மிக மென்மையாக இருப்பதோடு, ரசிகர்களையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

இருப்பினும் இயக்குனர் 3 மணி நேரம் பயணிக்கும் நேரத்தில் சற்று தொய்வு ஏற்படுத்தும் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில், ‘மெய்யழகன்’ உறவுகளை வார்த்தை ஜாலத்தில் வசீகரித்து கவர்ந்து இழுக்கும் அழகான அழகன்.

 

ரேட்டிங் 3.5/5