தி பெட் – திரைப்பட விமர்சனம்!

29

 

CHENNAI:

படம்: தி பெட்

நடிப்பு: ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா

தயாரிப்பு: வி விஜயகுமார்

இசை: தாஜ் நூர்

ஒளிப்பதிவு: கே. கோகுல்

இயக்குனர்: எஸ் மணிபாரதி

பி ஆர் ஓ: ஏ. ஜான்

ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் வீக் எண்ட் கொண்டாட்டம் ஒன்றுக்குத் திட்டமிடுகிறார்கள். அதன்படி அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று ஒரு விடுதியில் உல்லாசமாக கழிக்கத் தீர்மானிக்கிறார்கள். இந்நிலையில் வலைதள தேடலில் ஒரு புரோக்கர் மூலம் விலைமாதுவான சிருஷ்டி டாங்கே கிடைக்க,அவரை  சந்தித்து பணத்தை கொடுத்து ஊட்டிக்கு அழைத்துச் செல்கின்றனர். அழகியும் விலைமாதுவான சிருஷ்டி டாங்கேவை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறார் ஸ்ரீகாந்த். அதனால் தன் நண்பர்கள்  சிருஷ்டி டாங்கேவிடம் நெருங்கி பழகாமல் இருக்க பல முயற்சிகள் செய்து தடுத்து விடுகிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் துடிக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் திடீரென்று சிருஷ்டி டாங்கே காணாமல் போய்விடுகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார்.இப்படி யார் கண்ணிலும் படாமல் மறைந்து விட்ட அவர்களை  நண்பர்கள் மூவரும் ஊட்டி முழுக்கத் தேடுகிறார்கள். எங்கு தேடியும் அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது புரியாமல் தவிக்கிறார்கள். இந்த சூழலில் காணாமல் போனவர்கள்  கிடைத்தார்களா? சிருஷ்டி டாங்கே யார் என்று தெரிந்தும் ஸ்ரீகாந்த் அவரை விரும்பியது ஏன்? என்ற கேள்விகளுக்கு “தி பெட்’ படம் பதில் சொல்லும்.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், மென்பொருள்துறை பணியாளர் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.விலைமகள் எனினும் அவர் மீது காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார்.எதிர்பாரா சிக்கல் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

விலைமகளிர் வேடமேற்றிருக்கும் சிருஷ்டிடாங்கே உடைகளில் அதைக்காட்டி விடாமல் நடிப்பிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் வருகிறார்கள்.போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் நாயகியின் அம்மாவாக வரும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் தேவிப்பிரியா ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் அந்தந்த பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தக் கதையும் ஊட்டியில் நடப்பதால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேலை எளிது என்று நினைத்துவிடாதபடி திரைக்கதையின் போக்கிற்கேற்ற இடங்களைத் தேடித் தேடி நமக்குக் காட்டி மகிழ்வூட்டியிருக்கிறார்.

தாஜ்நூர் இசையில் பாடல் ரசிக்கும் ரகம்.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டுவர உழைத்திருப்பது தெரிகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி.மாந்தர்கள் கதை சொல்வது போல் இல்லாமல்,ஒரு விடுதியின் படுக்கை, கதை சொல்வது போல் கதை எழுதியிருப்பதும்,அதற்கு, இரகசிய திருப்பங்களைக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருப்பதும், ஒரு விலைமகளிரை நாயகி என வைத்துக் கொண்டு நயத்தக்க நாகரிகத்துடன் காட்சிகள் வைத்திருப்பதும் வரவேற்புக்குரிய விசயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்தக் கதையாக இருந்தாலும்,போரடிக்காமல் கொண்டு சென்று ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட வேண்டும் என்பது பொதுவிதி.அதை முறையாகக் கடைபிடித்திருப்பது இயக்குநரின் பலம் என்பதால் அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 3/5