
CHENNAI:
படம்: அமரன்
நடிப்பு: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ்
தயாரிப்பு: கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் ஆர் மகேந்திரன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சி எச் சாய்
இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
பி ஆர் ஓ: டைமண்ட் பாபு, சதீஷ் எஸ்2
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது அமரன்.
சிறுவயதில் ராணுவ வீரனாக வேண்டும் என்ற ஆசையில் வளர்கிறார் முகுந்த் (சிவகார்த்திகேயன்). அவரது தந்தை அதற்கு சம்மதித்தாலும் தாய் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். ஆனாலும் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறார். கடுமையாக உழைத்து மேஜர் பதவிக்கும் உயர்கிறார். காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஒடுக்குவதற்காக தலைமை ஏற்று செல்கிறார். முதல் கட்டமாக அதி பயங்கர தீவிரவாதி ஒருவனை சுட்டு வீழ்த்துகிறார். அந்த தீவிரவாதியின் தம்பி முகுந்தை பழிவாங்க தாக்குகிறான். இந்த தாக்குதல் பெரிய மோதலாக உருவெடுக்கி றது அதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.
ஜாலியாக ஹீரோயினை காதலித்துவிட்டு சூரியுடன் சேர்ந்து காமெடி செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்திற்கு முகுந்த் வரதராஜனாக தன்னை இப்படத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார். உடல் தோற்றத்திலும், ஆக்சன் காட்சிகளிலும் அவர் காட்டியிருக்கும் வேகம் இதுவரை அவரிடம் பார்க்காத ஒரு வேகமாக இருக்கிறது.
மறைந்திருந்து தாக்கும் தீவிரவாதிகளை ஆக்ரோஷமாக துப்பாக்கி சூடு நடத்தி ரத்த வெள்ளத்தில் மோதும்போது தனது கதாபாத்திரத்தை முதல்காட்சிலேயே மனதில் நிலைநிறுத்தி விடுகிறார் சிவகார்த்திகேயன்.
கல்லூரி காலத்தில் சாய் பல்லவவியுடன் சிவகார்த்திகேய னுக்கு மலரும் காதல் காட்சிகள் தீவிரவாத பூகம்பத்துக்கு நடுவே ஒரு தென்றல் வீசுவதுபோல் சாமரம் வீசுகிறது.
முழுக்க முழுக்க ராணுவ பணியை மட்டுமே ஸ்கிரிட்டாக அமைத்து விடாமல் மேஜர் முகுந்தின் காதல் வாழ்க்கையில் நடக்கும் இரு குடும்பங்களுக்கு இடையேயான கலாச்சார மோதலை மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.
சாய் பல்லவியை காதலிக்கக் கூடாது, அவரை திருமணம் செய்து தர மாட்டோம் என்று கூறும் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் சிவகார்த்திகேயன் ஒரே சந்திப்பில் அவர்களின் மனதை கவர்ந்து காதலுக்கு சம்மதம் பெறுவது தீபாவளி இனிப்பாக இனிக்கிறது.
தன் குழந்தைக்கு அச்சமில்லை அச்சமில்லை என்று முகுந்த் நிஜத்தில் சொல்லிக் கொடுக்கும் பாடலை ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் பாடி முறுக்கேற்றுவது புல்லரிக்கிறது.
சாய் பல்லவியை தவிர வேறு யாரையாவது இந்து கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்திருந்தால் அது வெறும் நடிப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் சாய் பல்லவி அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ்.
ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் சார்பில் ஆர் மகேந்திரன் இணைந்து சரியான படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசை வணக்கத்துக்குரிய.ராணுவ இசை.
சி எச் சாய் கேமரா காஷ்மீரின் சந்து பொந்துக்கள் மூளை முடுக்குகளை துருவி துருவி படமாக்கி இருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்த போதும் அந்த கிளைமாக்ஸ் வரும்போது இளகிய மனம் கொண்டவர்கள் கண்களில் கண்ணீர் சிந்துகிறார்கள். அந்த கண்ணீர் துளிகளில் மேஜர் முகுந்துக்கான மரியாதையும், படத்தின் வெற்றிக்கான உறுதியும் வெளிப்படுகிறது. இப்படி ஒரு கதையை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்ததற்காக அவருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு சல்யூட் வைக்கலாம்.
ரேட்டிங் 4.5/5