’ஆழி’ திரைப்பட விமர்சனம்

35

 

CHENNAI:

படம்: ஆழி

நடிப்பு: சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மவுன்கல் வர்கீஸ், தீனா பாட்டியா

தயாரிப்பு: சஜித் கிருஷ்ணன்

இசை: வில்லியம் பிரான்சிஸ்

ஒளிப்பதிவு :ஆனந்த் என் ராய்

இயக்கம்: மாதவ் ராமதாசன்

பிஆர்ஓ: நிகில் முருகன்.

மூர்த்தி என்கிற பெயர் கொண்ட சரத்குமார் நாகர்கோவிலில் பல போதை மருந்துகள் போன்ற திரை மறைவு வேலைகள் செய்யவராக இருக்கிறார். ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் அவர் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதால் மகள் மீது பாசம் கொண்ட தந்தையாக இருக்கிறார்.. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து படிப்பை தொடரும் நேர்மையான மாணவன். இந்த காதல் விஷயம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. இதனால் கோபம் கொள்ளும் அவர் தன் மகள் கதலிக்கும் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி ஆழ்கடல்லுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஆழ்கடலில் வைத்து கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், அவரிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் “ஆழி” படத்தின் மீதிக்கதை.

பாசமுள்ள தந்தையாகவும், போதைப் பொருள் கடத்தல் மன்னனாகவும் நடித்திருக்கும்  சரத்குமார், அவரது பயங்கரமான தோற்றமும் முகத்தை மறைக்கும் நீண்ட முடியும் தாடியும் அதிகம் பேசாத முரட்டுத்தன சுபாவமும் அந்தப் பாத்திரத்தை சரியாகவே வெளிப்படுத்துகின்றன. அப்படி ஒரு தோற்றமும் நடிப்பும் அவருக்கு கை கொடுத்து உள்ளது சிறப்பு.

காதலனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித்தின் கதாபாத்திரம், இளைஞர்களின் பிரதிநிதிபோல் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.உங்கள் மகளின் மனம் புரிந்த இணை நான்தான் என்பதை வசனங்களில் மட்டுமின்றி பார்வைகளிலும் உடல்மொழியிலும் சரத்குமாரிடம் வெளிப்படுத்துகிறார்.

சரத்குமார் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் நல்ல தேர்வு.குறைவான திரை இருப்பு என்றாலும் பார்ப்போர் மனதில் நிறை இருப்பு.

ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி,டீனா பாட்டியா, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ்,வையாபுரி உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள்.

ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் நடக்கின்றன. உண்மையாகவே அங்குபோய் படப்பிடிப்பு நடத்திய உணர்வைக் கொடுத்திருக்கிறார்.

ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சுமார் ரகம். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே ரகம் தான்.

மாதவ் ராமதாசன் எழுதி இயக்கியிருக்கிறார்.காலங்காலமாக நாட்டில் நடந்துவரும் காதலனின் காதல் பெரிதா? தந்தையின் பாசம் பெரிதா? என்கிற பட்டிமன்றத்தின் தொடர்ச்சியாக இந்தக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு சாதாரண காதல் கதையை நடுக்கடல் பின்னணியில் வைத்து பரபரப்பான திரைக்கதையாக மாற்றியிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய சாதனை. கடலில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் திகில் கலந்த நெருக்கடியை உருவாக்குகிறது.

மொத்தத்தில், ‘ஆழி’ ரசிக்கக் கூடிய படம்.

ரேட்டிங் 2.5/5.